Thursday, August 5, 2010

இறைவனை நினைவு கூறும் வழிமுறைகள்

ஒரு நம்பிக்கையாளர் தன் இலக்கான சுவனத்தை அடைவதற்கு இறைவனை நினைவு கூறுபவராக இருத்தல் அவசியம். அதிலும் ரமலானை அடைய இருக்கும் இந்நேரத்தில் எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறை நினைவுடனும் இருப்பது என்பது குறித்து பார்ப்போம்.

நமது தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தும் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறைவனை எந்நேரமும் நினைவு கூறக் கூடியவர்களாகவும் இருப்பது கடினமானதாக தோற்றமளிக்கலாம். ஆனால் அது எளிமையாக இருக்க வேண்டுமானால் கீழ்காணும் நான்கை நாம் முறையாக கடைபிடித்தால் இவ்வுலகும் மறுவுலக வாழ்வும் சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை. முயன்று தான் பார்ப்போமே?

1. எப்போதும் என்னை இறைவன் கண்காணித்தவனாக இருக்கிறான்

நாம் தனியாக இருந்தால் இரண்டாமனாகவும் இரண்டு பேர் இருந்தால் மூன்றாமவனாகவும் அல்லாஹ் இருக்கிறான். நாடி நரம்பை விட சமீபத்தில் இருக்கிறான். நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பார்ப்பவனாகவும் நாம் பேசும் அனைத்தையும் செவியுறுபவனாகவும் அல்லாஹ் இருக்கிறான். அவன் இருளிலும் பகலிலும் என எல்லா இடங்களிலும் இருப்பவற்றை அறிய கூடியவனாக இருக்கிறான்.

ஒரு நாளின் எந்த செயலை செய்ய ஆரம்பிக்கும் போதும் எச்சொல்லை சொல்லும் முன்பும் இதை நினைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே நினைவூட்டி கொள்ளுங்கள். இந்நினைவு உங்கள் சுவாசமாக மாறும் அளவு இதை உங்கள் மனதில் இருத்தி கொள்ள வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் உள்ளத்தை தூய்மைபடுத்த சிறந்த வழியை கேட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள் " நீ எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் அல்லாஹ் உன்னுடன் இருக்கிறான் என்று நினைத்து கொள்" (திர்மிதி)

2.என்னிடம் இருப்பவை அனைத்தும் இறைவன் அளித்ததே

நம்மிடம் இருப்பவை அனைத்தும் இறைவன் அளித்த அருட்கொடையே. நாம் மனிதனாக பிறந்தது, முஸ்லீமாக இருப்பது, நம் வாழ்வியல் வசதிகள், நம் அறிவு, ஞானம், பதவி உள்ளிட்ட அனைத்தும் இறைவனின் அருட் கொடையே. எனவே நம்மிடம் இருப்பவைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கூடிய அடியானாக இருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனை புகழ பல துஆக்களை கற்று தந்துள்ளார்கள். அவற்றை நம் வாழ்வின் எல்லா செயல்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு காலையில் கண் விழித்தாலும் ஏதேனும் உணவு உட்கொண்டாலோ இறைவனுக்கு அல்ஹம்துலில்லாஹ் என்று நன்றி சொல்லக் கூடியவராக இருந்தார்கள்.

நாம் நன்றி சொல்லி விட்டோம் என்று திருப்தி ஏற்பட்டால் இந்த ஹதீதை வாசித்து பாருங்கள் " உடம்பில் உள்ள 360 இணைப்புகளுக்காவும் நீங்கள் ஒவ்வாரு இணைப்புக்கும் ஸதகா தினந்தோறும் செய்ய வேண்டும்" என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றை நாம் புகாரியில் காணலாம். அறிவியலாளர்களின் கூற்று படி நம் இதயம் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 தடவை துடிக்கிறது. அத்துணை தடவையும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் துடிக்கிறது. அல்லாஹ் துடிக்க அனுமதி கொடுக்கவில்லையென்றால் நம் நிலை? எனவே நாம் அனைத்திற்கும் நன்றி செலுத்த கூடியவர்களாக வேண்டும்

3. இறைவனின் நாட்டமின்றி எனக்கு எதுவும் நேராது

இறைவன் விதித்ததை தவிர வேறு எந்நன்மையும் எத்தீங்கும் நேராது என்பதில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். திருமறையின் 6ஆம் அத்தியாத்தில் 17,18 வசனத்தில் குறிப்பிடுவது போன்று நன்மையும் தீமையும் இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இவ்வாறு துஆ கேட்டார்கள் " நீ எனக்கு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. நீ எனக்கு தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க இயலாது" (புகாரி)

4. ஒரு நாள் இறைவனிடம் செல்ல போகிறேன். அது இன்றாகவும் இருக்கலாம்

எம்மனிதனுக்கும் தாம் எப்போது இவ்வுலகை விட்டு செல்ல இருக்கிறோம் என்பது தெரியாது. அது அன்று மாலையாக, அடுத்த நாள் காலையாக அல்லது அப்போதே கூட இருக்கலாம். எனவே இச்சிந்தனை நம்மிடம் வந்து விட்டால் இது தான் என்னுடைய கடைசி தொழுகை என்று நினைத்து தொழுதால் கண்டிப்பாக அத்தொழுகை ஊசலாட்டமில்லாமல் இருக்கும். அது போல் நாம் இந்நினைவுடன் எல்லா காரியங்களும் செய்தால் இறைவன் நாடினால் அது அவனால் ஏற்று கொள்ளப்பட கூடிய ஒன்றாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

எனவே வர கூடிய ரமலானை பயன்படுத்தி இந்நான்கு நிலைகளை நம்மில் கொண்டு வருவோம். அதை நம் முழு வாழ்விலும் ஸ்திரப்படுத்துவோம். இதை படிக்கும் சகோதரர்கள் தங்களின் துஆவில் எனக்கும் இந்நிலையை இறைவன் கொடுக்க பிராத்தியுங்கள்.

Kilai Rahman

Tuesday, July 27, 2010

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்

நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் மனைவி – மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

வீட்டில் அபிவிருத்தி வேண்டி மவ்லீது ராத்தீபுகளை புது புது மெட்டுகளில் ஓதி இறையருள் பெற முயற்சிக்கிறேன். இதெல்லாம் தவறு என்று உள்மனம் கூறுகிறது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் நாட்டம் நிறைவேற சலவாத்துன்னாறியா 4444 தடவை ஓதி துஆ கேட்கிறேன். இது குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்றாலும் என் மன ஆறுதலுக்காக, அபிவிருத்திக்காக இதை ஓதுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

புனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு, சேவல் பலி தருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்க, பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல், மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் குடும்பத்தில் என் நான்கு பிள்ளைகள், நான்கு மத்ஹப்களில் இருக்கின்றனர். நானும் என் தம்பிகளும் எல்லா அரசியல் அமைப்பிலும் அங்கம் வகிக்கிறோம், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

கடவுள், பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

(அல்ஜன்னத்) ஆசிரியர்: போதும்! போதும்!! கொஞ்சம் இடம் கொடுத்தா, பக்கம் பக்கமாக மானம்-விமானம் ஏற்றிடுவீங்க போலிருக்கே..?.

ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.

உணர்வாய் உன்னை

உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி).

இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..

பகுதி ஒன்று:

அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:

1. சந்தோஷமான, மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்ச்சியும் ஆழமானதா?

3. அல்லாஹ்வுடன் உள்ள தொடர்புகளில் சோம்பேறித்தனமாக இருந்தீர்களா?

4. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்த சமயம் தவிர, எத்தனை முறை அல்லாஹ்வுடன் துவா மூலம் பேசினீர்கள்?

5. எத்தனை முறை அல்லாஹ்வுடைய வழிகாட்டலை கேட்டிருக்கிறீர்கள்?

6. கவலை, தேவை, சிரமம் போன்ற சமயங்களில் எத்தனை முறை அல்லாஹ்விடம் கையேந்தியிருக்கிறீர்கள்?

7. அல்லாஹ்வின் நினைவையும், அவனுடனுள்ள உங்களுடைய கடமையுணர்ச்சியையும் அதிகரிப்பதற்கு தினசரி, வாராந்திர அடிப்படையில் நீங்கள் என்ன செய்யலாம்?

8. அல்லாஹ்வை எந்நேரமும் நினைவில் நிறுத்த, குர்ஆன், நபிமொழிகளிலுள்ள துவாக்களை எப்படி மனப்பாடம் செய்யலாம்?

9. அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும்படி சகமனிதர்களை அழைத்திருக்கிறீர்களா?

உங்களுடைய இஸ்லாமிய அறிவு:

1. உங்களுடைய வாழ்நாட்களில் தினமும் குர்ஆனின் ஒரு வசனங்களையாவது பொருளறிந்து படித்திருக்கிறீர்களா? இல்லையெனில் இன்றிலிருந்து முயற்சி எடுப்பீர்களா?

2. இஸ்லாமிய கல்வி வட்டம் அல்லது வகுப்புகளுக்குச் சென்றீர்களா? இல்லையென்றால், அங்கு செல்லத் தடையாக இருப்பது எது..? எப்படி அந்தத் தடையை நீக்கலாம்?

3. இஸ்லாமிய அறிவைப் பெறுவதற்காக, மாநாடுகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ பயணம் செய்தீர்களா?

4. கடந்த வருடத்தில் நீங்கள் கற்ற இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் முன்பு அறிந்திராத 10 விஷயங்கள் எவை? அவற்றில் நீங்கள் நடைமுறையில் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தவை எவை?

5. நீங்கள் அல்லாஹ்விற்காக மட்டுமே அறிவைத் தேடினீர்களா அல்லது வேறு எதாவது காரணத்திற்காகவா?

6. இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் அறிந்திராத எந்த 10 விஷயங்கள் பற்றி அடுத்த ரமளானுக்குள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?

7. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய புத்தங்கள் படித்தீர்கள்?

8. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய வீடியோக்களை பார்த்தீர்கள்?

9. சுமாராக எத்தனை இஸ்லாமிய ஆடியோ கேசட்டுகள் கேட்டீர்கள்?

10. அறிவு பெறுவதற்கு உங்களுக்கு எது மிகவும் பொருத்தமாக இருக்கிறது? (கேட்டல், பார்த்தல் அல்லது படித்தல்)

11. உங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் அவர்களிடம் உள்ள மார்க்க ஞானம் பற்றியும் அறிந்திருக்கிறீர்களா? அவர்கள் அறியாமையில் இருப்பின் அவைகளை களைய ஏதாவது முயற்சி எடுத்தீர்களா.?

உங்களுடைய தொழுகை:

1. ஒரு நாளுக்கு ஐந்து முறை தொழுகிறீர்களா?

2. ஒரு நாளில் எந்தெந்த தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதீர்கள்?

3. பள்ளியிலோ பணியிலோ இருக்கும் போது தொழுகை நேரத்தில் தொழுதீர்களா, இல்லயென்றால், வீட்டிற்கு வந்தபின் அதற்காக ஈடு செய்தீர்களா?

4. தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுகிறீர்களா? அல்லது நீங்கள் தொழுவது தான் சரியான முறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

5. உங்கள் தொழுகையில் மன ஓர்மையுடன் இருக்கிறீர்களா?

6. தொழுகையை ஆர்வத்துடனும், அன்புடனும், இறையச்சத்துடனும் எதிர்நோக்குகிறீர்களா அல்லது தயக்கத்துடனும், சோம்பேறித்தனத்துடனும், ஏதோ முடிந்தால் போதும் என்ற மனநிலையிலும் எதிர்நோக்குகிறீர்களா?

7. கடமையான (ஃபர்ள்) தொழுகையுடன், சுன்னத் தொழுகையையும் நிறைவேற்றுகிறீர்களா?

8. உங்கள் தொழுகையை எப்படி செம்மைப்படுத்தலாம்?

9. உங்கள் அடுத்த வீட்டுக்காரர்களுக்கும் உடன் வேலை செய்பவர்களுக்காவும் துவா செய்திருக்கிறீர்களா?

பகுதி இரண்டு:

உங்கள் குடும்பம்:

1. கடைசியாக எப்போது உங்கள் குடும்பத்திற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. உங்கள் குடும்பத்துடன் உங்களுக்குள்ள உறவு அல்லாஹ்வின் சந்தோஷத்திற்காகவா?

3. ஒரு முஸ்லிமாக, உங்களுக்கு உங்கள் குடும்பத்தின் பால் உள்ள பொறுப்பை அறிந்திருக்கிறீhகளா?

4. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள் என்ற முறையில் உங்கள் பொறுப்புக்களை அறிந்திருக்கிறீர்களா?

5. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள் என்ற முறையில் உங்கள் உரிமைகளை அறிந்திருக்கிறீர்களா?

உங்கள் பெற்றோர்:

1. உங்கள் பெற்றோருடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. அவர்களுடன் வசிக்கும் பட்சத்தில் தினமும் அர்த்தமள்ள உரையாடல் எதாவது உங்களுக்கிடையில் நடக்கிறதா?

3. களைய வேண்டிய வெறுப்புகள் எதையாவது வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

4. அவர்களிடம் நீங்கள் மரியாதையுடன் நடந்து கொள்கிறீர்களா?

5. கடந்த ஆண்டு, அவர்களை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்வதற்காக நீங்கள் செய்த 5 காரியங்கள் எவை?

6. உங்கள் பெற்றோருக்கு பணிவிடை செய்திருக்கிறீர்களா?

7. அவர்கள் தொலைவில் வசிப்பவர்களாக இருந்தால், அவர்களை அடிக்கடி போய்ப் பார்ப்பதோ, பேசுவதோ உண்டா?

8. பெருநாள் தினங்களில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றதுண்டா?

9. அவர்கள் உயிரோடு இல்லாவிட்டால், அவர்களுக்காக எப்போது பிரார்த்தனை செய்தீர்கள்?

10. அவர்களுக்காக சமீபத்தில் எப்போது தர்மம் செய்தீர்கள்?

உங்கள் வாழ்க்கைத் துணை:

1. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?

3. இஸ்லாமிய வகுப்புகளுக்குத் தொடர்ச்சியாக இருவரும் சேர்ந்து செல்வதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்களா?

4. நீங்கள் இருவராகவும், குடும்பமாகவும் இஸ்லாத்தை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கு எப்படி முயன்றீர்கள்?

5. பேசிக் தீர்த்துக் கொள்ள வேண்டிய மௌனமான வருத்தங்கள் ஏதாவது மனதளவில் இருக்கிறதா?

6. கடந்த வருடத்தில் எத்தனை முறை நீங்கள் இருவரும் சேர்ந்து மறுமை சிந்தனை குறித்து பேசியிருக்கிறீர்கள்?

7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?

8. கடந்த வருடத்தில் உங்கள் உறவினால் அல்லாஹ்வின் மேலும், இஸ்லாத்தின் மேலும் உள்ள ஈமான் வளர்ந்திருக்கிறதா?

9. உங்கள் வாழ்க்கைத் துணையின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி உணர்வீர்கள்?

உங்கள் பிள்ளைகள்:

1. உங்கள் பிள்ளைகளுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. அவர்களுடைய பள்ளி, பகுதி நேர, சமூக நடவடிக்கைகள், இவற்றில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?

3. அவர்களுடைய நண்பர்கள் யார் என்று தெரியுமா?

4. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?

5. அவர்களுடன் ஓய்வு நேரத்தைக் கழிக்கிறீர்களா?

6. அல்லாஹ்வுடன் பிள்ளைகளுக்கு நெருக்கத்தை ஏற்படுத்த நீங்கள் எடுத்த ஏதாவது 5 செயல்கள்.

7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?

8. அவர்களுக்கு முன்னால் வாழும் இஸ்லாமிய எடுத்துக்காட்டாக நீங்கள் இருந்திருக்கிறீர்களா?

9. எதன் மூலம் அவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவழிக்கலாம்?

10. அவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வளர்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

11. அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, எழுத்தாளர்கள், வீடியோ விளையாட்டுகள், விளையாட்டுப்பொருட்கள் போன்றவை என்ன என்று தெரியுமா?

12. எத்தனை முறை பள்ளிவாயிலில் ஜும்மா தொழுதிருக்கிறார்கள்?

13. உங்களைப் பற்றிய மதிப்பீடு அவர்களிடம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

14. அவர்கள் எதாவது சொல்ல நினைத்தால் உங்களிடம் பேசுவார்களா? அல்லது உங்கள் துணைவருடன் பேசுவார்களா?

15. உங்கள் உறவினர்களுடன் (உடன் பிறப்புகள், மற்றவர்கள்) உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

16. எத்தனை முறை அவர்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள்?

17. அவர்களுக்கு பெருநாள் வாழ்த்து-பரிசு ஏதாவது கொடுத்தீர்களா அல்லது பெருநாளுக்கு தொலைபேசியிலாவது பேசினீர்களா?

18. அவர்கள் அருகில் வசிக்கவில்லை என்றால் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களைப் போய்ப் பார்க்கிறீர்களா?

19. தீர்க்க வேண்டிய மனஸ்தாபங்கள் ஏதாவது இருக்கிறதா?

20. அவர்கள் அல்லாஹ்வை நெருங்க ஏதாவது முயற்சி செய்தீர்களா?

21. அவர்களுடைய ஹலாலான தேவைகளை (அதாவது பண உதவி) நிறைவேற்ற உதவியிருக்கிறீர்களா?

22. உங்களுடைய பிள்ளைகள் உங்கள் உடன்பிறப்புகளை அறிவார்களா?

பகுதி மூன்று:

உங்கள் செல்வம்:

1. கடந்த வருடத்தில் உங்கள் செல்வத்தைப் பெருக்கியிருக்கிறீர்களா?

2. அதற்காக அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்தினீர்கள்?

3. உங்கள் வருவாய் (வேலை) ஹலாலானதா? உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டால் யாரிடம் அதைப்பற்றி ஆலோசிக்கலாம்?

4. உங்களுடைய ஜகாத்தைக் கொடுத்துவிட்டீர்களா?

5. எத்தனை முறை, எவ்வளவு தர்மத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்?

6. எவ்வகைப் பொருட்கள், மக்கள், காரணங்களுக்காக இவ்வருடம் செலவழித்திருக்கிறீர்கள்?

7. உங்கள் செலவுகளுக்கு கணக்கு வைத்திருக்கிறீர்களா?

8. செலவுத்திட்டம் வைத்திருக்கிறீர்களா?

9. உங்கள் கடன் அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?

10. வட்டி வாங்குவது அல்லது கொடுப்பதிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டீர்களா?

11. அடுத்த வருடம் எந்த விஷயங்களுக்காக தர்மம் கொடுப்பதை முதன்மைப்படுத்தியிருக்கிறீர்கள்?


பகுதி நான்கு:

உங்கள் ஆரோக்கியம்:

1. உங்கள் ஆரோக்கியத்திற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினீர்களா?

2. உடற்பயிற்சி ஒழுங்காக செய்கிறீர்களா? இல்லையென்றால் ஏன்?

3. ஒழுங்காக உண்ணுகிறீர்களா?

4. சமச்சீர் உணவு உண்ணுகிறீர்களா?

5. அல்லாஹ்வை வணங்குவதற்காக உபரித் தொழுகைகளை உடலும் உள்ளமும் ஒன்றுபட தொழுதிருக்கிறீர்களா?

6. உங்கள் உடல்நிலையை எப்படி கவனித்துக் கொள்வது என்று அறிந்திருக்கிறீர்களா?

7. உங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களiயும் அதே போல் உடலைக் கவனித்துக் கொள்ள உற்சாகப்படுத்தியுள்ளீர்களா?

8. எப்போது கடைசியாக பொது உடற்பரிசோதனை செய்து கொண்டீர்கள்?

பகுதி ஐந்து:

உங்கள் தொழில்:

1. உங்கள் வேலையில் திசையையும் கவனத்தையும் தவற விட்டு விட்டீர்களா?

2. உங்கள் வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

3. உங்கள் வேலை இஸ்லாம் அனுமதிக்கக் கூடியதாக இருக்கிறதா?

4. இல்லையென்றால், எவ்வித வேலை மாற்றம் உங்களுக்கு ஹலாலான வருவாயைத்தருவதுடன், உங்கள் திறமைகளை அல்லாஹ்விற்காகப் பயன்படுத்த உதவும்?

5. இதைப் பற்றி ஒரு தகுதியான மனிதரிடம் கலந்தாலோசித்திருக்கிறீர்களா?

6. உங்கள் தொழில் ஹலாலானதாக இருந்தால், அதன் திறனையும், கவனத்தையும் முன்னேற்ற முயன்றிருக்கறீர்களா?

7. அல்லாஹ்விடம் உங்களுக்கு உள்ள உறவை முன்னேற்ற, உம்மத்திற்கும், சமுதாயத்திற்கும் நன்மை புரிய, என்னென்ன புது வழிகள் மூலம் உங்கள் தொழிலை உபயோகிக்கலாம்?

8. தொழில் அல்லாஹ்வின் பொருத்தத்தின் பிரகாரம் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை பிறருக்கும் எத்தி வைத்துள்ளீர்களா..?

பகுதி ஆறு:

உங்கள் கல்வி:

1. உங்கள் தற்போதைய தகுதிகள் எவை?

2. அவை உங்களுக்கு திருப்தியைத் தருகின்றனவா?

3. இல்லையென்றால், எந்த அளவு கல்வியை அடைய விரும்புகிறீர்கள்?

4. உங்கள் கல்வித்தகுதியை மேம்படுத்த என்னென்ன ஹலாலான வழிகள் (வட்டியில்லாக் கடன்) உள்ளன?

5. மாணவராக இருந்தால், உங்கள் கல்வி உங்களை அல்லாஹ்விடம் நெருக்கமாகக் கொண்டு செல்லுமா?

6. எவ்விதத்தில் உங்கள் கல்வி முஸ்லிம்களுக்கும், பொதுவாக சமுதாயத்திற்கும் உபயோகமாக இருக்கும்?

7. உற்சாகத்தோடும், முழு ஈடுபாட்டோடும் படித்திருக்கிறீர்களா?

8. உங்கள் கல்வித் தகுதியை முன்னேற்ற, எதாவது கூடுதலான திட்டங்கள் அல்லது வகுப்புகளில் சேர வேண்டுமா? (மேற்கண்ட கல்வியை உலகக் கல்வி மார்க்க கல்வி என்று பிரிக்க வேண்டாம். இரண்டும் கல்வி தான்).

பகுதி ஏழு:

ங்கள் நேரம்:

1. இவ்வருடம் எதில் அதிக நேரம் செலவழித்தீர்கள்?

2. அதில் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா?

3. இல்லையென்றால், எதில் உங்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிட விரும்பியிருப்பீர்கள்?

4. அதை செயல்படுத்த என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்?

5. உங்களிடம் சரியான கால நிர்வாகத் திட்டத் திறமைகள் உள்ளனவா? இல்லையென்றால், அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

6. அதைப் பற்றிய புத்தகம் படிக்க இயலுமா?

7. அல்லது காலநிர்வாகத் திட்டக் கல்வி பயில சிறிது பணம் செலவழிக்க முடியுமா?

8. உங்கள் காலத்தைத் திட்டமிடுகிறீர்களா?

9. உங்கள் வாழ்வில் சரியான முறையில் நேரத்தைச் செலவழித்ததற்கு உதராணமாக ஒரு நாளைக் குறிப்பிட முடியுமா?

10. இவ்வருடம், உங்களுக்கு சராசரியாக ஒரு வாரத்தில் எவ்வளவு ஓய்வு நேரம் கிடைத்தது?

11. தற்போது உங்களுக்கு எத்தனை மணி நேரம் ஓய்வாகக் கிடைக்கிறது?

12. உங்கள் ஓய்வு நேரத்தை இன்னும் செம்மையாக எப்படி செலவழிக்கலாம்?

13. அல்லாஹ்வுடன் நெருக்கத்தை அதிகரிக்க உங்கள் ஓய்வு நேரம் எப்படி உதவும்?

14. தொலைக்காட்சி எத்தனை நேரம் பார்க்கிறீர்கள்?

15. அதிக நேரம் தொலைக்காட்சியின் முன்னால் செலவழிக்கிறீர்களா? அல்லது உங்கள் குடும்பத்தினருடன் பேசுவதில் செலவிடுகிறீர்களா?

16. தொலைக்காட்சியின் காணும் காட்சிகள் இஸ்லாத்திற்கு விரோதமாக உள்ளதா..? பிரயோஜனமாக உள்ளதா..?

பகுதி எட்டு:

உங்கள் இஸ்லாமியப் பணி:

1. நற்கரியங்களுக்காக எத்தனை நேரம் ஒதுக்குகிறீர்கள்?

2. உங்கள் நேரத்தை பள்ளிவாசலுக்காகவோ முஸ்லிம் கல்விக் கூடத்திற்காகவோ செலவழித்திருக்கிறீர்களா?

3. களப்பணியில் ஈடுபட்டிருக்கிறீர்களா?

4. இஸ்லாமிய செய்தியை மற்றவர்களிடம் எத்தி வைப்பதற்கு எத்தனை நேரம் செலவழித்திருக்கிறீர்கள்?

5. இஸ்லாத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்களைப் போய்ச் சந்தித்தீர்களா?

6. நீங்களும் உங்கள் அக்கம் பக்கத்தினரும் ஒருவர் மற்றவருடைய இன்ப, துன்பங்களில் பங்கேற்றீர்களா?

7. ஒரு முஸ்லிம் நிறுவனம் உபயோகிக்கக் கூடிய திறமைகள் எவற்றையாவது வளர்த்துள்ளீர்களா?

Sunday, June 13, 2010

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்!

தூய்மையான இஸ்லாத்தில் மார்க்கம் என்ற பெயரிலே பல போலி மார்க்க அறிஞர்கள் இணைவைப்பையும் புரோகிதத்தையும் புகுத்தினர். அதை இன்றும் சுன்னத்தை பின்பற்றுகிறோம் என்று போலி கூச்சல் போடுபவர்கள் நியாயப் படுத்தியே வருகின்றனர். அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கத்தை தெளிவாக எத்தி வைத்துவிட்ட நிலையில் இவர்கள் எந்த இலாபத்திற்காக மார்க்கத்தை வளைக்கின்றனர் என்று தெரியவில்லை. மேலும் இவர்கள் போன்றவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை விட வேற ஏதோ ஒன்றின் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது.

‎இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள் பற்றி அல்குர்-ஆனிலும் ஹதீஸ்களிலும் பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தில் அத்தகைய தீமைகள் சர்வ சாதாரணமாக மலிந்து கிடப்பதை காணலாம். இன்று பெரும்பாலான மனிதர்கள் சிறிது வசதி வந்தவுடனேயே கர்வத்துடனும் மார்க்கத்தின் செயல்பாடுகளில் அலட்சியத்துடனும் தங்களை ஏதோ வானத்தில் இருந்து குதித்ததுபோல் காட்டிக் கொள்கின்றனர். இவர்கள் ஏதோ ஆயிரம் வருடங்கள் இந்த உலகத்தில் வாழப் போவது போலவும் தங்களிடம் இருக்கும் இந்த செல்வம் நிலையாக இருக்கும் என்றும் ஒருவித மயக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய சிந்தனை உடைய முஸ்லிம்கள் தாங்கள் நிலையை மாற்றி நிலையில்லாத இந்த உலக வாழ்கையை விட நிலையான மறுமை வாழ்கையே சிறந்தது என்பதை தங்களுடைய மனதில் நிறுத்த வேண்டும். மேலும் இஸ்லாத்தின் போதனைகளை மற்றவர்களிடம் பரப்ப தங்களால் ஆன முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

1) ஷிர்க் எனும் இணைவைத்தல்!‎
‎“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) ‎எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ ‎அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)‎


‎2) சூன்யம், ஜோதிடம் மற்றும் குறிபார்த்தல்!‎

‎“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் ‎முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: ‎அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.‎

‎“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் ‎கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் ‎இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.‎

‎3) கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நன்மை செய்வதாக நம்புதல்!‎

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ‎ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய ‎இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‎‎‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) ‎அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் ‎இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை ‎பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன ‎நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து ‎நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ‎ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி

4) பாதுகாப்பு வேண்டி தாயத்து, கயிறு, வளையம் அணிதல்!‎
நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் நான் சென்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‎ஒரு தூதுவரை அனுப்பி ஒட்டகக் கழுத்தில் (கண் திருஷ்டிக்காகக் கட்டப்பட்டு) உள்ள வில் ‎கயிற்றினாலான மாலையை அல்லது (வில் கயிற்றினாலான மாலையென குறிப்பிடாது ‎பொதுவான) எந்த மாலையையும் துண்டிக்காமல் நீர் விட்டு விட வேண்டாம் என்று நபி (ஸல்) ‎அவர்கள் அம்மனிதருக்கு கூறியதாக அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி) ‎

‎(ஷிர்க்கான வார்த்தைகளைக் கூறி) மந்திரித்தல், தாயத்துகள், (ஏலஸ்கள் கட்டுதல். தாவீசுகள்) ‎திவலாக்கள் ஆகிய அனைத்தும் ஷிர்க்காகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் ‎கேட்டேன் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், ‎அபூதாவூத்)‎

5) துர்ச்சகுனம் பார்த்தல்!‎
‎(இஸ்லாத்தில்) தொற்றுநோய் என்பதில்லை; துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது; ஆந்தை சாஸ்திரம் ‎பார்ப்பதும் கூடாது; சஃபர் என்பதும் கிடையாது; நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கூடாது; கொள்ளி ‎வாய்ப் பிசாசுமில்லை’ என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி ‎வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - (ரலி) நூல்: புகாரீ, முஸ்லிம்

எவர் ஒருவருடைய (அவர்பார்த்த) சகுனம் அவருடைய தேவையை (நிறைவேற்றி முடிப்பதை) ‎விட்டும் திருப்பி விடுகிறதோ அவர் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பித்து விட்டார்’ என நபி தூதர் ‎ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதனுடைய பரிகாரமென்ன? ‎என்று (நபித் தோழர்களான) அவாகள் கேட்டார்கள் அ(தற்கு நபிய)வர்கள் ‎

அல்லாஹூம்ம லா கைர இல்லா கைருக்க, வலா தைர இல்லா தைருக்க, வலா இலாஹ இல்லா ‎கைருக்க.‎

‎(பொருள்: யாஅல்லாஹ்! உன் நன்மையன்றி வேறு நன்மையில்லை உன் சகுனமின்றி வேறு ‎சகுனமில்லை உன்னையன்றி வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறில்லை) என நீர் ‎வுறுவதாகும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபள்லு இப்னு அப்பாஸ் - ரலி நூல்: அஹ்மது

6) முகஸ்துதி (பிறருக்கு காண்பிப்பதற்காக அமல் செய்தல்)‎
‎“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் ‎அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது ‎சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) ‎காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை ‎நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)‎

‎‘என்னிடம் தஜ்ஜாலை விடவும் (அவனால் உங்களுக்கு ஏற்படும் தீமையை விடவும்) உங்கள் மீது ‎அதிகம் பயப்படத்தக்க ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் ‎ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். ஆம்! தெரிவியுங்கள் என ‎‎(தோழர்களான)அவர்கள் கூறினார்கள். அ(தற்கு நபிய)வர்கள், (நான் பெரிதும் உங்கள் மீது ‎பயப்படும் தீங்கு) மறைமுக ஷிர்க்காகும் (அது யாதெனில்) ஒருவர் தொழுகையை நிறைவேற்ற ‎நிற்கிறார். தன்னை மற்றவர் பார்ப்பதை கண்டு தனது தொழுகையை (நீட்டி நிறுத்தி) ‎அழகுபடுத்துகிறார் (முகஸ்துதியான இதுவே மறைமுக ஷிர்க்காகும்) எனக் கூறினார்கள்.‎

7) காலத்தை ஏசுதல்!‎
காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள் காலத்திற்குச் ‎சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறிவரச் செய்பவனும் நானே என அல்லாஹ் ‎கூறியதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ‎அபூஹூரைரா - ரலி நூல்: புகாரி.‎

‎8.) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!‎

‎‘அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் சபிப்பானாக’ அறிவிப்பவர் : அலி (ரலி), ‎ஆதாரம் : முஸ்லிம்.‎

9) கப்றுகளில் கட்டங்கள் எழுப்புதல்!‎
அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் ‎வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து ‎விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் ‎கெட்வர்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.‎

‎10) கப்றுகளுக்காக விழா நடத்துதல்!‎

எனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் ‎கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். ‎அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.‎

11) சமாதி வழிபாடு!‎
யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ‎ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் ‎‎: முஸ்லிம்.‎

‎“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற ‎அடிமைகளே!” (அல்-குர்ஆன் 7:194)‎

‎12) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!‎

‎“உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!” (அல்-குர்ஆன் 108:2)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் ‎சபிப்பானாக!” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.‎

13) அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்தல்!‎
‎“இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் ‎எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் ‎அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்” (அல்-குர்ஆன் 2:270)‎

‎“அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேர்ச்சை செய்தவர், (அதை நிறைவேற்றி) அவனுக்கு ‎வழிபடுவாராக! அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நேர்ச்சை செய்தவர்; (அவ்வாறு அதை நிறை ‎வேற்றி) அவனுக்கு மாறுசெய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர்; ‎ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்: ஆயிஷா - ‎ரலியல்லாஹூ அன்ஹு. ஆதாரம் : புகாரீ, அஹ்மது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

14) இறைவனல்லாத பிறரை (அவுலியா, இறைநேசர்கள் போன்றவர்களை) அழைத்து ‎உதவி தேடுதல்!‎
‎“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் ‎அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே ‎அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)‎

‎“அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் ‎இறந்து விடுகின்றானோ அவன் நரகில் நுழைவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.‎

15) அல்லாஹ் அல்லாதவர் ஹலாலை ஹராமாக்குவதையும் ஹராமை ஹலாலாக்கு ‎வதையும் ஏற்றுக்கொள்ளுதல்!‎
‎“(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் ‎கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ‎ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக்

கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் ‎பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?” (அல்-குர்ஆன் 10:59)‎

அதிய்யி பின் ஹாதிம் - ரலி அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் (நான் நபி ஸல்லல்லாஹூ ‎அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் அது சமயம், வேதக்காரர்களான) ‘அவர்கள் ‎அல்லாஹ்வையன்றி தங்களுடைய பாதிரிமார்களையும், தங்களுடைய சந்நியாசிகளையும், ‎மர்யமுடைய மகனார் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்’ (9:31) என்ற ‎பொருளுடைய வசனத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டு, ‎‎‘நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்குபவர்களாக இருந்ததில்லையே! எனக் கூறினேன்.‎

அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அ(ந்தக் குருமார்களான)வர்கள் ‎அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கி, அதனால் நீங்கள் அதை ‎ஹராமாக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை அவர்கள் ஹலாலாக்கி, ‎அதனால் நீங்கள் அதை ஹலாலாக்கவில்லையா?’ எனக் கேட்டார்கள். ஆம்! என நான் கூறினேன். ‎‎(ஹலாலாக்குவது மற்றும் ஹராமாக்குவதின் விஷயத்தில் அவர்களை பின்பற்றி நடப்பதான) ‎இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ‎அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது.‎

16) தொழுகையை விட்டுவிடுதல்!‎
‎‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) ‎கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு ‎நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் ‎மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‎‎‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). ‎‎(அல்-குர்ஆன் 74:42-47)‎

ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு ‎தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)‎

17) தொழுகையில் பொடுபோக்காக, அலட்சியமாக இருத்தல்!‎
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் ‎தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)‎

அபூஹுரைரா ‎رَضِيَ اللَّهُ عَنْهُ‎ அறிவிக்கிறார்கள்: நபி ‎صلى الله عليه وسلم ‏அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ‎ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் ‎முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க ‎வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் ‎சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)‎

18) அவசர அவசரமாக தொழுதல்!‎
‎“முஹம்மது நபி ‎صلى الله عليه وسلم‎ அவர்கள் கூறினார்கள் : ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் ‎தொழுகையில் திருடுபவன்’ என்று நபி ‎صلى الله عليه وسلم‎ அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் ‎தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ‎ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி ‎صلى الله عليه وسلم‎ ‎அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர் : அபூகதாதா ரலி, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)‎

‎“ருகூவை பூரணமாக செய்யாத, ஸஜ்தாவை மிக குறுகிய நேரத்திலும் செய்த ஒருவரைப் பார்த்து, ‎‎“இந்த நிலையிலேயே தொழக்கூடியவர்கள் இறக்க நேரிட்டால், அவர் முஹம்மது நபி ‎صلى الله عليه ‏وسلم‎ அவர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறு மார்க்கத்தை நிலைநாட்டியவராகத்தான் ‎மரணிப்பார்” என்று நபி ‎صلى الله عليه وسلم‎ அவர்கள் கூறினார்கள்.‎

19) அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்!‎
‎“அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவர் இணைவைத்து விட்டார் என ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ஸலி), ஆதாரம் : ‎அபூதாவுத், அஹ்மத். (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே ‎இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் ‎தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, ‎‎‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் ‎தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். ‎அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), ‎ஆதாரம் : புகாரி.‎

20) வேண்டுமென்றே ஜமாஅத் தொழுகையை தவறவிடுதல்!
நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் ‎முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். ‎‎(அல்குர்ஆன் 2 : 43)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட ‎இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று ‎நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் ‎இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ ‎வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

21) தொழுகையில் இமாமை முந்துதல்!‎
முஹம்மது நபி ‎صلى الله عليه وسلم‎ அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு ‎முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் ‎அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று ‎சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று ‎கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய ‎தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் ‎பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்றார்கள். ‎

22) கொலை செய்தல்!‎
‎“எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு ‎உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது ‎கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் ‎‎(அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்” (அல்-குர்ஆன் 4:93)‎

‎‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் ‎தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் ‎யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ ‎வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)‎

23) விபச்சாரம் செய்தல்!‎
‎“நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு ‎கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது” (அல்-குர்ஆன் 17:32)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் ‎பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் ‎மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் ‎வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)‎

‎24) ஓரினப் புணர்ச்சி (ஆணும் ஆணும் புணர்ச்சி) செய்தல்!‎

‎“மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் ‎சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் ‎செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் ‎‎(மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் ‎செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று ‎கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் ‎எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு ‎எதுவுமில்லை” (அல்-குர்ஆன் 29:28-29)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை ‎செய்யக்கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’ ‎அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாம் : அஹ்மத்.‎

25) வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல்!‎
‎“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு ‎அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் ‎செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் ‎அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து ‎‎(இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; ‎‎(கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:278-2:279)‎

‎“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், ‎அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, ‎அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் ‎முஸ்லிம்.‎

26) மது அருந்துதல்!‎
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், ‎இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் ‎சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)‎

மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட ‎மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் ‎அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ‎ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் ‎செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது ‎நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் ‎நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை ‎நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது ‎கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் ‎தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், ‎நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ‎அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)‎

27) சூதாட்டத்தில் ஈடுபடுதல்!‎
‎“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் ‎கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) ‎பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் ‎பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)‎

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் ‎எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே ‎நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ‎ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் ‎உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் ‎நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை ‎விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)‎

28) பொய் பேசுதல்!‎
நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் ‎தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) ‎அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி ‎செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : ‎புகாரி.‎

29) திருடுதல்!‎
‎“திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள ‎தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் ‎மிக்கோனுமாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:38)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ஒரு முட்டையைத் ‎திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை ‎துண்டிக்கப்படும்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

‎30) லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல்!‎

‎“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் ‎சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு ‎பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) ‎நெருங்காதீர்கள்” (அல்-குர்ஆன் 2:188)‎

‎‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ ‎என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ‎‎(ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.‎

31) பொய்சாட்சி கூறுதல்!‎
அபூபக்ரா (ரலி) பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? ‎என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், ‎‎‘அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வுக்கு ‎இணைவைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து ‎உட்கார்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான், அறிந்து ‎கொள்ளுங்கள் பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்த ‎மாட்டார்களா? என நாங்கள் கூறும் அளவுக்கு அவற்றை திரும்பத் திரும்பக் ‎கூறிக்கொண்டிருந்தார்கள். ஆதாரம் : புகாரி.‎

32) அவதூறு கூறுதல்!‎
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு ‎வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது ‎சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். ‎‎(அல்-குர்ஆன் 24:4)‎

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் ‎நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் ‎கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)‎

33) அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்!‎
‎“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் ‎தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) ‎கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)‎

‎‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் ‎கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். ‎

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், ‎நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் ‎சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், ‎கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.‎

34) கர்வம் கொள்ளுதல்!‎
‎“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை ‎நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 4:36)‎

அபூஹுரைரா ‎رَضِيَ اللَّهُ عَنْهُ‎ அறிவிக்கிறார்கள்: ‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ‎ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் ‎நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் ‎அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி ‎‎(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)‎

35) தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல்!‎
‎‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் ‎பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் ‎நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)‎

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது ‎நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் ‎மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)‎

36) அளவு நிறுவையில் மோசடி செய்தல்!‎
‎“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து ‎வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ ‎கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ‎எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)‎

‎“மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் ‎வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; ‎எடையைக் குறைக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 55:7-9)‎

37) பிறர் சொத்தை அபகரித்தல்!
அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்கள் : “எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் ‎சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். ‎அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் ‎கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக ‎அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க ‎விடப்படும்” என்று கூறினார்கள்.‎

38) மோசடி செய்தல்!‎
‎“எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் ‎செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது ‎சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் ‎எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:161)‎

‎“நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 8:58)‎

39) அநீதி இழைத்தல்!‎
‎“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் ‎அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) ‎அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று ‎நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். ‎அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.‎

40) புறம் பேசுதல்!‎
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் ‎நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் ‎துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் ‎பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க ‎விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை ‎அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை ‎செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)‎

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‎அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) ‎அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் ‎கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. ‎அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் ‎பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் ‎பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ‎நூல்: முஸ்லிம்)

Kilai Rahman
Doha-Qatar

Tuesday, June 8, 2010

மனிதனின் பலகீன நிலை பாரீர்!

மனிதனின் பலகீன நிலை பாரீர்!

மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனித இனத்தைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களில் தெளிவாக எடுத்துரைக்கிறான். அவை வருமாறு:
4:28 பலகீனமாக படைக்கப்பட்டவன்.
10:44 தனக்குத்தானே அநியாயம் செய்கிறான்.
11:9 நன்றி கெட்டவன்
14:34 மிக்க அநியாயக்காரன், நன்றி கெட்டவன்
16:4 பகிரங்க எதிரி
17:11 அவசரக்காரன்
17:67 நன்றி மறப்பவன்
17:85 மிக மிக அற்ப அறிவை மட்டுமே உடையவன்
17:100 கஞ்சனாக இருக்கிறான்
18:54 அதிகமாகத் தர்க்கம் செய்கிறான்
21:37 அவசரக்காரன்
22:66 நன்றி கெட்டவன்
29:66 இறைவனுக்கு மாறு செய்கிறவன்
33:72 அநியாயக்காரன், மூடன்(ஜாஹில்)
36:77 வெளிப்படையான தர்க்கவாதி
39:8 நேர்வழியிலிருந்து வழி கெடுக்கிறான்
41:49 நிராசைக்காரன்
42:48 நிராகரிப்பவன்
43:15 பகிரங்கமான பெரும் நிராகரிப்பவன்
70:19 அவசரக்காரன்
75:5 மறுமையை பொய்ப்பிக்கிறான்
76:27 மறுமையை மறந்து இவ்வுலகை நேசிக்கிறான்
80:17 நன்றி மறந்தவன்
87:16 மறுமையை மறந்து இவ்வுலகை தெரிவு செய்கிறான்
89:20 பொருளை அளவு கடந்து நேசிக்கிறான்
89:23 நரகம் முன் கொண்டு வரப்படும்போது உணர்வான்
90:4 கஷ்டத்தில் படைக்கப்பட்டவன்
95:5 செயலினால் கீழ்நிலை அடைகிறான்
96:6 வரம்பு மீறுகிறான்
100:6 இறைவனுக்கு நன்றி கெட்டவன்
100:8 பொருளை நேசிப்பதில் அளவு கடந்தவன்
103:2 பெரும் நஷ்டத்தில் இருக்கிறான்

இந்த அனைத்து இறைவாக்குகளையும் மனிதன் படித்து விளங்குவானேயானால் தன்னுடைய இயலாமை-பலகீன நிலை பற்றித் தெளிவாக அறிவான். அவனிடம் ஆணவம், அகங்காரம், தற்பெருமை, நான்தான் என்ற மமதை ஒருபோதும் ஏற்படாது. தன்னைப் படைத்த இறைவனின் ஆற்றல், அதிகாரம் இவை அனைத்தையும் திட்டமாக, தெளிவாக உணர்வான்.

இவ்வளவு குறைபாடுகள் உள்ள மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அறிவோ மிகமிக அற்பமானது என்று 17:85ல் அல்லாஹ் கூறி மனிதனுடைய ஆற்றல் குறைவை வெளிப்படுத்தியுள்ளான். மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அற்ப அறிவை இறைவனது நிறைவான அறிவுடன் ஒப்பிடும்போது, சமுத்திரத்தில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால் அதிலுள்ள நீரளவுதானும் மனித அறிவு இல்லை. அந்த அற்ப உலக அறிவிலும் தனி மனிதனுடைய அறிவு, கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பதை யாரே மறுப்பார்.

பல்வேறு துறைகளில் சிரமப்பட்டு மிகக் கடினமாக உழைத்துப் படித்துப் பட்டங்கள் பல பெற்ற ஒரு பேரறிஞரிடம் முதலாம் வகுப்புப் படிக்கும் கத்துக்குட்டி இல்லை, ஒரு பிரிகேஜி பிஞ்சு எதிர்வாதம் செய்தால் அவனைப்பற்றி என்ன சொல்வோம். அதைவிட மிகமிகக் கேவலமான இழிவான நிலைதான் மிக அற்ப அறிவை உடைய மனிதன் அல்லாஹ் தெள்ளத் தெளிவாக இறக்கியருளிய அல்குர்ஆனிலுள்ள கட்டளைகளுக்கு மேல் விளக்கம் கொடுக்க முற்படுவதாகும்.

தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், ஷேக்குகள் என பெருமை பேசும் மனிதர்கள் இப்படிப்பட்ட அறிவீனமான இழி செயலைச் செய்ய முற்படுகிறார்கள். மார்க்கத்தை-நேர்வழியை பல கோணல் வழிகளாக்கி-மதமாக்கி அது கொண்டு வயிறு வளர்ப்பவர்கள், நிச்சயம் அல்குர்ஆனில் உள்ளதை உள்ளபடி ஒருபோதும் சொல்ல முடியாது. 2:159,161,162, 7:175-179 இறைவாக்குகள் கூறும் உண்மை இதுவே. மனித சுபாவமே ஷைத்தானின் ஆசை வார்த்தைகளில் மயங்கி அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்து- நிராகரித்து (25:30) ஷைத்தானைப் பின் தொடர்வதாகவே இருக்கிறது. இது ஆதித் தந்தை ஆதத்தில் தொடங்கி, அவரது மகன், மார்க்கத்தை மதமாக்கும் புரோகிதர்கள், புரோகிதர்களது பக்தர்கள் என தொடர் கதையாகத் தொடர்கிறது. புரோகிதர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளைப் படித்து விளங்கி அவற்றில் உள்ளது உள்ளபடிச் செயல்படுகிறவர்களே வெற்றியாளர்கள்.

By

Abdul Rahman
Doha

Saturday, June 5, 2010

Face Book (முகநூல்) என்ற போதை

அன்பின் சகோதரர்களே நண்பர்களே உங்கள் அனைவருக்கும் தூய இஸ்லாத்தின் சிறப்பான முகமனை தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்….


இன்றைய நவீன உலகம் நமது கைக்குல் சுருங்கிவிட்டது இப்படி சுருங்கியதால் மிகப்பெரிய நன்மைகள் இருப்பதைப் போல் தீமைகளும் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இன்று கையில் கையடக்க தொலைபேசி இல்லாதவர்கள் இல்லை என்கின்ற அளவுக்கு அனைவரிடமும் தொலைபேசி விளையாடுகிறது.அதுபோல் பெரும்பாலான வீடுகளில் இணையத்தள பயன்பாடு அதிகரித்திருக்கிறது.இப்படி வீட்டிலிருந்து அனைத்து துறைகளிலுமே நவீனத்துவம் நுழைந்துதான் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் இந்த இணையத்தள பயன்பாடு.இதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? யார் பயன்படுத்துவது போன்ற விபரங்கள் கண்டிப்பாக நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

ஏன் என்றால் இணையத்தளத்தில் எப்படி பல நல்ல விஷயங்கள் படிப்பதற்கு தேவையான தகவல்கள் இருக்கின்றதோ அது போல் அதற்கு சரி சமமாக கெட்ட விஷயங்களும் கொட்டிக்கிடக்கிறது.

இந்த சந்தர்பத்தில் ஒரு உண்மை முஸ்லிம் இதில் அல்லாஹ்வைப் பயந்து நடந்து கொள்ள வேண்டியுள்ளது ஏன் எனில் எவ்வளவு சிறந்தவராக தன்னை ஒருவர் சொல்லிக் கொண்டாலும் சந்தர்பம் அவரை நல்லவரா கெட்டவரா என்று காட்டிக் கொடுத்து விடும்.

இப்படி இணையத்தள பாவனையாளர்கள் இன்று அதிகமானோல் தங்களை தாங்கள் யார் என்று அடையாளப் படுத்தும் ஓர் இடமாக இருப்பதுதான் முகநூல் (Face Book) இதில் உலகத்தில் கிட்டத்தட்ட (02.12.2009 கணிப்பின் படி) முன்னூற்று ஐம்மது மில்லியனுக்கு அதிகமானவர்கள் வாசகர்களாக உலா வருகிறார்கள்.அத்துடன் சென்ற வருட கணிப்பின் படி உலகில் முதல் இடம் பிடித்திருக்கும் இணையத்தளமும் இதுதான்.

350 மில்லியன் வாசகர்களில் கிட்டத்தட்ட பண்ணிரண்டு வீதமானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

பேஸ்புக் என்றால் என்ன?


முகநூல் என்று அழைக்கப் படக்கூடிய பேஸ்புக் என்ற இந்த இணையத்தளத்தில் இன்று அதிகமான ஆண்களும் பெண்களும் வாசகர்களாகியுள்ளனர்.இந்த இணையத்தளம்
2004 அன்று Mark Elliot Zuckerberg என்பவரால் உருவாக்கப் பட்டதாகும். ஆரம்பத்தில் இவர் facemash எனும் இணையத்தளத்தையே கண்டுபிடித்தார். பின்னர் தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக இவரது facemash ஆனது இவரால் facebook ஆக மாற்றப்பட்டது. இரண்டாயிரத்து ஆராம் ஆண்டிலிருந்து 13 வயதிற்கு மேற்பட்ட எவரும் facebook ஜப் பயன்படுத்த முடியுமென்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குல் இந்த இணையத்தளம் மிகப் பெரியதொரு வாசகர் வட்டத்திற்கு உரியதாக மாரியது.

பேஸ் புக்கில் நடப்பது என்ன?

இன்று நண்பர்களை சேமிக்கிறோம் என்று சொல்லித்தான் இளைஞர்கள் இந்த இணையத்தளத்தில் உருப்பினர்களான மாறுகிறார்கள்.

ஆனால் இந்த இணையத்தளத்தில் எப்படிப்பட்ட நற்புகள் உருவாகிறது என்றால் மிகவும் ஆபாசமாகவும்,அந்தரங்கத்தை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மொத்தத்தில் ஒரு உண்மை மனிதன் அங்கீகரிக்க முடியாத ஒரு நற்புதான் இதில் உருவாகிறது.

உதாரணத்திற்கு ஒருவர் இந்த பேஸ்புக்கில் தனக்குறிய உருப்பினர் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டவுடன் அவர் பற்றிய விபரங்களை அதிலே அவர் இடுவதற்கான அவருக்குறிய பகுதி அதிலே ஒதுக்கப் படும் பின் அவர் அதிலே இட்ட தகவல்களை படிப்பதற்கு அணைவருக்கும் அனுமதிக்கப் பட்டுவிடும்.

தனது புகைப்படம்.

தான் யார்?

எந்த நாட்டை சேர்ந்தவர்?

தொழில் செய்பவரா? அல்லது மாணவரா?

இது போன்ற என்னோரன்ன தகவல்கள் அதிலே பதியப் படும் இவையனைத்தும் அனைவரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் வெளிப்படையாகவே இருக்கும்.

இப்படியிருக்கும் போது இதில் ஒருவர் இன்னொருவருடன் நற்பை ஏற்படுத்துவார் அந்த நேரத்தில் ஆண் பெண் என்ற வித்தியாசமே இருக்காது.

ஆரம்பத்தில் வேறுவிதமாக நற்பு என்ற பெயரில் உருவெடுக்கும் இந்த உறவு காலப்போக்கில் காதலாக,காமமாக கள்ளத் தொடர்புகளாக மாறுவதை இதில் தொடர்புல்ல எவரும் மறுக்க முடியாது.

அத்துடன் இப்படிப்பட்ட பேஸ்புக் தொடர்பால் பாதிக்கப் பட்டு வாழ்க்கை இழந்தவர்களின் வரலாறுகளும் பல உண்டு என்பதும் உண்மை.

இந்த வகையான நற்புகளில் ஈடுபடும் சிலர் இதற்கு ஒரு காரணத்தை பதில் என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது நாங்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்கிறோம் நமது மார்கத்தை உலகத்திற்கு எத்தி வைக்கிறோம் இதுதான் அவர்களின் பதில்.

முதலில் ஒரு இந்து அன்பரிடம் அல்லது கிருத்தவ நண்பரிடம் நாம் நமது மார்கத்தை பிரச்சாரம் சைகின்ற போது நாம் ஒரு இந்துவாகவோ கிருத்தவராகவோ மாற வேண்டிய அவசியம் இல்லை அப்படி நமது மார்கம் நமக்கு கற்றுத்தரவும் இல்லை.

ஆனால் இந்த பேஸ்புக் (முகநூல்) பிரச்சாரகர்கள்(?) அத்தனைபேரும் நாங்கள் இதிலே பிரச்சாரம் செய்கிறோம் என்று வாய் கூசாமல் கூறுகிறார்கள்.

அத்தனை அனாச்சாரமும் கொட்டிக்கிடக்கின்ற இடத்தில் தான் நீங்களும் சேர வேண்டுமா? அப்படி உங்களுக்கு அவர்களிடம் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றால் வேறு எத்தனையோ வழிமுறைகளை கையாளலாமே? அதை எல்லாம் விட்டு விட்டு ஏன் ஒரு வயதுக்கு வந்த ஆண் ஒரு வயதுக்கு வந்த அன்னிய பெண்ணிடம் மாத்திரம் பேச வேண்டும் பழக வேண்டும்?

போட்டோ இல்லை என்றால் அல்லது குறிப்பிட்ட அந்த நபர் பெண்ணாக இல்லை என்றால் யாரும் அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய முன்வருவதில்லை.இது தான் பேஸ்புக் பிரச்சாரத்தின் லச்சனம்.

ஆக அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே! சகோதர சகோதரிகளே!

அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் facebook ஐ தவிர்ந்து கொள்ளுங்கள்.

Tuesday, May 4, 2010

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!

بسم الله الرحمن الرحيم
سر النجاح
ومفتاح الخير والبركة والفلاح

ஒரு வாலிபன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்; பின்னர் திருமணத்துக்காக தயாராகின்றான்; அப்போது அவனது சகோதரன் அப்பெண்னை திருமணம் முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான். அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்; ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இறுதியில் வேறொரு பெண்னை மணக்கின்றான். குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம் பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.

ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் வேலை பார்த்து வந்தான்; ஆனால் அவனது சம்பளமோ தனது அடிப்படைத் தேவையைக்கூட நிறைவேற்ற போதாது; அல்லாஹ் அவனுக்கு நேரான வழியைக் காட்டினான்; அல்- குர்ஆன் மனனப்பிரிவில் சேர்ந்தான்; அத்தோடு பள்ளியில் நடக்கக்கூடிய மார்க்க வகுப்புக்களிலும், மார்க்க சொற்பொழிவுகளிலும் தவறாமல் கலந்து கொள்பவனாக இருந்தான். என்றாலும் அவனது தொழிலோ அதற்குத் தடையாகவே இருந்து வந்தது. இதனால், தான் மனைவி மக்களுடன் வீட்டில் இருப்பதற்கும் வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் மிக மிக குறைவாகவே அவனுக்கு நேரம் கிடைத்தது.

ஒரு நாள் அறிஞர் ஒருவரிடம் சென்று, தனது கஷ்டத்தை, முறைப்பாட்டை முன் வைக்கின்றான். அவர் சில அறிவுரைகளைக் கூறினார். அன்றிலிருந்து அந்த வேலையை வெறுத்தவனாக தான் அல்-குர்ஆனையும் கற்று, மார்க்க வகுப்புக்களிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேறொரு வேலையை தேடுகிறான். ஆனாலும் எங்கு தான் செல்ல? பின்னர் மார்க்க அறிஞர் அவனை பார்த்து, நன்மையை, தனது தேவையை வேண்டி தொழும் தொழுகையைப் பற்றி (இஸ்திகாரா தொழுகை) தெரியுமா? என்று கேட்க, அவன் தெரியாது என்று கூறினான். பின்னர் அதனை கற்றுக் கொடுத்தார். அவன் உடனே இஸ்திகாரா தொழுகையைத் தொழுதுவிட்டு இறைவன் பால் நம்பிக்கை வைத்தவனாக பிரார்திக்கின்றான். பின்னர் முயற்ச்சி செய்து ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றான்.

சிறிது காலத்துக்குப் பிறகு மார்க்க அறிஞரிடம் மகிழ்ச்சியுடன் சநதோஷமான நிலையில் சென்று கூறினான். அல்லாஹ் எனது கஷ்டத்தை நீக்கினான்; குறைந்த நேரத்தில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டேன்; இதன் மூலம் மார்க்க வகுப்புக்களிலும், தனது மனைவி மக்களுடனும் இருப்பதற்கு மிக மிக வசதியாக இருப்பதாக கூறினான்.

இதனது இரகசியம் தான் என்ன? இவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது எது? இதுதான் இஸ்திகாரா தொழுகையின் இரகசியம்! இதனை பற்றிய தகவல்களை பின்வருமாறு பார்ப்போம்.

இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!

மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.

ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்! சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.

இவ்வாறாண நிலைமைகளில் ஜாஹிலியா கால அரேபியர்கள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக சில வழிமுறைகளைக் கையாண்டார்கள். அதுதான் அம்பெய்து குறி பார்ப்பதாகும்! அவர்களிடம் மூன்று சீட்டுகள் இருக்கும்; அவற்றில் ஒன்றில் “செய்” என்றும் மற்றதில் “செய்யாதே” என்றும் மற்றொன்றில் “ஒன்றும் இருக்காது”! இவற்றில் “செய்”என்ற சீட்டு விழுந்தால் குறித்த அக்காரியத்தைச் செய்வார்கள். “செய்யாதே” என்ற சீட்டு விழுந்தால் அதனைச் செய்ய மாட்டார்கள்.

“ஒன்றும் இல்லாத” சீட்டு விழுந்தால் ஏதோ ஒன்று விழும் வரை தொடர்ந்து சீட்டுகளை போட்டுக்கொன்டே இருப்பார்கள். இவ்வாறான நிலைமைகளில் இருந்து அல்லாஹ் முஃமின்களை பாதுகாத்தான். அதனை அவர்களுக்கு தடை செய்தான்.

قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق….) سورة المائدة :03

அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்” (அல்குர்-ஆன் 5:3)

இதற்கு பகரமாக, நன்மையை நாடி தொழும் தொழுகையை (ஸலாத்துல் இஸ்திகாரா) நபி (ஸல்)அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதில் இருக்கக்கூடிய பிரார்தனை, “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல், உதவி தேடுதல் அனைத்து சக்திகளை விட்டும் ஏக இறைவனது சக்தியை மாத்திரம் எதிர்பார்த்தல் முழுமையாக அவனது செயல்கள் வர்னனைகளை ஒருமைப்படுத்தல் அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டுவது போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும்.”

அல்லாஹ் மனிதனிடத்தில் கொண்ட கருனையால் தனது அடியானுக்கு (இஸ்திகாரா தொழுகையை) செய்யும்படி சொல்கின்றான். இச்செயலை செய்வதற்கு படைத்த இறைவனுக்கு முன்னால் ஒரு சில நிமிடங்களை மாத்திரமே செலவு செய்ய வேண்டும. இக்காரியத்தைச் செய்கின்றவர்கள் மிக மிக அரிதே! இத்தொழுகையின் மூலம் தான் நாடியதை தனது இறைவனிடம் கேட்பான்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிகப் பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே!

இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான் சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்”

இஸ்திகாரா தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.

இஸ்திகாரா தொழுகையை தொழும் முறை:

பர்ளு தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை இஸ்திகாரா தொழுகை என்ற என்னத்தோடு தொழ வேண்டும். அதில் சூரா பாதிஹாவையும் அதன் பின்னால் அல்குர்-ஆனில் சில வசனங்களையும் ஓத வேண்டும். சுஜூதில் அல்லது அத்தஹியாத்தில் அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பிறகு இஸ்திகாரா நபிமொழியில் வரக்கூடிய பிரார்த்தனையை, துஆவை பொருள் விளங்கி ஓதவேண்டும். தொழுகைக்கு பிறகு பிரார்த்திப்பதே மிக சரியான முறையாகும்.

இஸ்திகாரா தொழுகையைப் பற்றி வரக்கூடிய நபிமொழியும் பிரார்தனையும்:

عن جابر رضي الله عنهما قال:كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن،يقول:إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ثم ليقل : اللهم إني أستخيرك بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم،فانك تقدر ولا أقدر،وتعلم ولا أعلم،وأنت علام الغيوب،اللهم إن كنت تعلم أن هذا الأمر- ويسمي حاجته-خير لي في ديني ومعاشي وعاقبة أمري-أو

قال عاجل أمري وآجله-فاقدره لي ويسره لي،ثم بارك لي فيه،وان كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري- أو قال:عاجله وآجله-فاصرفه عني واصرفني عنه،واقدر لي الخير حيث كان ثم أرضني به. (أخرجه البخاري. )

“அல்லாஹூம்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பீகுதுரதிக, வஅஸ் அலுக மின் பழுலிகல் அழீம், பஇன்னக தக்திர் வலா அக்திர், வதஃலம் வலா அஃலம், வ அன்த அல்லாமுல் குயூப், அல்லாஹூம்ம இன் குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர – (தேவையைக் குறிப்பிட வேண்டும்) -கைருன் லீ பீ தீனீ வமஆஷீ வஆகிபது அம்ரீ பக்துர்கு லீ வயஸ்ஸிர்கு லீ சும்ம பாரிக்லீபீ, வ இன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீதீனீ வமாஆஷீ வ ஆகிபது அமரீ பஸ்ரிப்கு அன்னீ வஸ்ரிப்னீ அன்கூ வக்துர்லியல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்”

இதன் பொருள்:

“யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னிடமிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கிறேன்; ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்; என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதனையும் அறியமாட்டேன். மேலும் நீயே மறைவானவை அனைத்தும் அறிந்தவன்! யாஅல்லாஹ்! இந்த விஷயம் (விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்) எனக்கும், எனது தீனுக்கும், எனது வாழ்கைக்கும், எனது விவகாரத்தின் முடிவுக்கும்-இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான, தாமதமான விவகாராத்திற்கும் – நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்கு, எனது தீனுக்கும் எனது வாழ்கைக்கும் எனது விவகாரத்திம் முடிவுக்கும் – இவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான், தாமதமான விவகாரத்துக்கும்) தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தித் தருவாயாக!” (ஆதாரம் புகாரி)

இஸ்திகாரா தொழுகையை தொழும் நேரம்:

இஸ்திகாரா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. எனினும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்களை தவிர்ந்து கொள்வது நல்லதே! பஜுர் தொழுகையிலிருந்து சூரியன் ஒரு ஈட்டி உயரும் வரை உள்ள நேரம், மற்றும் அஸருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் மரையும் வரை உள்ள நேரங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான நேரங்களில் நபிலான தொழுகைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு காரணத்துக்காக தொழும் தொழுகையை தொழலாம். உதாரணமாக பள்ளியுடைய கானிக்கை தொழுகை (தஹீயதுல் மஸ்ஜித்) மேலும் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ளப்படும் நேரங்களில் தொழுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். உதாரணமாக இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், இஸ்திகாரா தொழுகை தொழ தடுக்கப்பட்ட நேரத்தை விட்டும் பிந்திவிடுமானால் அந்நேரத்தில் தொழலாம்.

தவறான நம்பிக்கை:

இஸ்திகாரா தொழுகையை இரவில் தூங்குவதற்கு முன் தொழுதுவிட்டு தூங்கினால் அத்தூக்கத்தில் ஒரு கணவு காண்பார்; அக்கணவே சரியானது என்று சில மனிதர்கள் தவறாக இதனை புரிந்திருக்கின்றார்கள். இது முற்றுமுழுதாக பிழையான கருத்தும் நபிமொழிக்கு மாற்றமான முறையும் ஆகும். மேற்குறிப்பிட்டது போல் இத்தொழுகைகென்று குறிப்பிட்ட நேரம் இல்லை. அத்தோடு இஸ்திகாரா தொழுபவர் கணவு காண்பது நிபந்தனையும் அல்ல! ஆகையால் எப்பொழுது ஒரு மனிதனுக் தேவை வருகின்றதோ அப்பொழுது அவன் தொழுவான். பின்னர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பான்.

இஸ்திகாரா தொழுவதற்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்:

அனைத்து விஷயங்களுக்காகவும் தொழலாம்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிக பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே! எத்தனை மனிதர்களது சிறிய விஷயங்கள் மிக பெரிய விஷயங்களாக மாறி இருக்கின்றன! இந்த நபிமொழியில் வரக்கூடிய “அனைத்து விஷயங்களிலும்” என்ற சொல் இதற்கு ஆதாரமாக இருப்பதோடு அதனை உறுதிப்படுத்துகின்றது.

ஆனால் இரண்டு விஷயங்களை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்:

(1) கட்டாயமான கடமைகள், தடுக்கப்பட்டவைகள்; உதரணமாக ஒரு மனிதன் லுஹர் தொழுவதற்காக வேண்டி லுஹர் தொழுவதா? இல்லையா? என்பதற்காக இஸ்திகாரா தொழுவது கூடாது! அல்லது ஹராமக்கப்பட்டிருக்கின்ற வட்டியை வாங்குவதற்கு முன்னால் வட்டியை வாங்குவதா? இல்லையா? என்பதற்கு இத்தொழுகை தொழக் கூடாது! ஏனெனில் லுஹர் தொழுகை என்பது ஒரு கடமையான தொழுகை. அதனை ஒரு முஸ்லிம் தொழுதுதான் ஆக வேண்டும். அத்தோடு வட்டி எடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஒன்று. அதனை ஒருவன் தவிர்ந்துதான் ஆகவேண்டும்.

(2) வழமையான விஷயங்கள், உதாரணமாக ஒருவன் உண்பதற்கும் குடிப்பதற்கும் இஸ்திகாரா தொழ முற்படுகிறான் உண்பதா? குடிப்பதா? என்று! இதற்கு இஸ்திகாரா தொழவேண்டிய தேவையும், பிரார்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனெனில் ஒருவன் உண்பதும் குடிப்பதும் இன்றியமையாத தேவைகளாகும்.

அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்தவற்றிலே நன்மையுண்டு:

ஒரு முஸ்லிம், ஒரு விஷயத்துக்காக இஸ்திகாரா தொழுவான்; ஆனால் அந்த விஷயத்தையே முக்கியத்துவப்படுத்தி அதிலே உறுதியாக இருப்பான்; அல்லாஹ் அவனுக்கு அதனை விதியாக்கி இருக்கமாட்டான்! உதாரணமாக, ஒருவன் தனக்கு விரும்பிய பெண்னை திருமணம் முடிப்பதற்காக இஸ்திகாரா தொழலாம். ஆனால் அல்லாஹ்வின் விதியில் அது எழுதப்பட்டிருக்காது. இவ்வாறான நிலைமையில் அல்லாஹ்வின்பால் அவன் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவனது விதியை முழுமையாக பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கபட்டவற்றிலே நன்மையும் வெற்றியும் உண்டு என்று அவன் நம்ப வேண்டும். சில வேளைகளில் அவன் விரும்பிய அப்பெண் அவன் மோசமாகுவதற்கு அல்லது பாவியாகுவதற்கு காரணமாக இருக்கலாம்! ஆனால் அதனை அவன் அறியமாட்டான். யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

قال تعالى(وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون)

سورة البقرة :216

அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:216)

அதிகமான மக்கள் பல விஷயங்களை வெறுத்திருப்பார்கள்; ஆனால் அவைகள் அவனது விதியில்-அல்லாஹ்வினால் நன்மையுள்ளதாக எழுதப்பட்டிருக்கும்! பிற்காலத்தில் அதில் அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அதே போன்று எத்தனையோ மனிதர்கள் ஏராளமான விஷயங்களை விரும்பி இருப்பார்கள். விரும்பப்பட்ட அவ்விஷயங்கள் அவனை அழிவின்பால் இட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கலாம். இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

قال تعالى (والله يعلم وأنتم لا تعلمون)سورة البقرة :216

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:216)

சில விஷயங்களை பொருத்தவவையில், அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடி இருப்பான். ஆனால் அதில் அவனுக்கு வெற்றி இருக்காது! உதாரணமாக ஒரு மனிதன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக இஸ்திகாரா தொழுது பிரார்திப்பான்; அத்திருமணம் நடக்கும்; குறித்த அப்பெண்னை மணப்பான்; காலப்போக்கில் அத்திருமணம் சீர்குழைந்துவிடும்; எனவே இச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை பொருந்திக்கொள்ள வேண்டும். அதுவும் அவனுக்கு நல்லதாகவே இருக்கும் அதனை அவன் அறியமாட்டான்

இஸ்திகாரா தொழுகையினால் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்வொன்றை காண்போம்:

ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டு ஒருவர் பிரயாணத்தை மேற்கொள்வதற்காக ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். அவர் விமான நுழைவு சீட்டையும் (Boarding Pass) பெற்று விமானத்துக்கு புறப்படும் இடத்தில், அழைக்கும் வரை எதிர்பார்த்து இருந்தார். அப்போது தன்னை அறியாமல் தூக்கம் அவரை மிகைத்து விட்டது. திடீரென விழித்தபோது, விமானம் புறப்படக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது; வாயில்கள் மூடப்பட்டுவிட்டன; அப்போது அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!

விமானத்திற்குள் நுழைவதற்காக தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அனைத்துமே பயனளிக்கவில்லை! பின்னர் தான் கவலையுற்றவராக தடுமாறிக் கொண்டிருந்தார். குறித்த விமானம், ஒரு சில வினாடிகளில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அடுத்த விமான நிலையத்திற்கு தரையிறக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஆனால் தரையிறக்கப்படுவதற்கு முன்னரே 300 பிரயாணிகளுடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனது இரகசியம் என்ன?

அம்மனிதர் தீப்பிடிக்கும் என்று கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்! இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு! நிச்சயமாக அம்மனிதருக்கு பிரயாணம் செய்ய கிடைக்கவில்லை; அதன் மூலம் அவருக்கு நலவு இருந்திருக்கின்றது!

எப்பொழுது துஆவுடன் மாத்திரம் சுருக்கிக்கொள்ள வேணடும்?

சிலருக்கு சில சந்தர்ப்பத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருப்பார்கள்! மாதவிடாய், நிபாஸ் நிலைமைகளில் இருக்ககூடிய பெண்களைப் போன்றவர்ககளைக் கூறலாம். இவர்களை பொருத்தவரையில் தொழ முடியுமான நிலை வரும்வரை தொழுகையைப் பிற்படுத்தலாம். குறித்த அச்சந்தர்ப்பத்தைப் பிற்படுத்த முடியாவிட்டால், தொழுதுதான் ஆகவேண்டுமானால் துஆவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். அதாவது நபிமொழியில் வரக்கூடிய பிரார்தனையை மாத்திரம் கேட்பார். இதற்கு பின்வரக்கூடிய வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன.

قال تعالى(لا يكلف الله نفسا إلا وسعها….)سورة البقرة286

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை” (அல்-குர்ஆன் 2:286)

قال تعالى (فاتقوا الله ما استطعتم)سورة التغابن:16

அல்லாஹ் கூறுகின்றான்:

“உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” (அல்குர்-ஆன் 64:16)

சகோதரா! உனது வியாபாரத்தை துவக்குவதற்கு முன்னால் அல்லது தொழிற்சாலைக்கு வேலையாட்களை சேர்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுதுகொள்!

சகோதரா! நீ ஒரு தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னால் அதில் நன்மையுண்டா? தீமையுண்டா? என்பதனை உன்னால் அறிய முடியாது! அல்லது ஒரு நோயாளி தனது நோயை குணப்படுத்த வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னால், அல்லது ஒரு வீட்டையோ, தொலைதொடர்பு சாதனங்களையோ, ஒரு வாகனத்தையோ வாங்குவதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! திருமணத்திற்காக தயாராகுவதற்கு முன்னால், திருமண பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்னால், மணமகன் அல்லது மணமகளைப் பார்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! இஸ்திகாரா தொழுகை வெற்றியின் ஆரம்ப படித்தரமாகும்! அல்லாஹ்வின் நாட்டத்தால் இம்மை மறுமை வெற்றிக்கு காரணமாகவும் அமைகின்றது! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடந்து அவனுடன் உண்மையான முறையில் நடந்துகொண்டால், அவன் மீதே நம்பிக்கை வைத்தால், வெற்றியின் நுழைவாயில்கள் அனைத்தையுமே அவன் திறந்து கொடுப்பான்.

இது அல்லாஹ்வின் அருள்! அவன் நாடியவருக்கு அருள்பாளிக்கின்றான்! அல்லாஹ் மகத்தான அருளுக்கு உரியவனுமாவான்.

Abdul Rahman
Doha-Qatar

Wednesday, April 21, 2010

செல்வத்தைப் பெருக்கும் ஆசை!

செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது!

''பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு'' (அல்-குர்ஆன் 3:14)


கப்ருகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசையில் இருக்கும் மனிதன்!


''செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்'' (அல்-குர்ஆன் 102:1-8)
பொருட் செல்வமும், மக்கள் செல்வமும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்!

''செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன'' (அல்-குர்ஆன் 18:46)
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்!

அறிந்து கொள்ளுங்கள்: ''நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை''' (அல்-குர்ஆன் 57:20)

இவ்வுலகில் செல்வங்கள் தரப்பட்டிருப்பது ஒரு சோதனைக்காதத் தான்!

''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்'' (அல்-குர்ஆன் 8:28)
அல்லாஹ் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்!

''அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா? இவர்கள் மறுக்கின்றனர்'' (அல்-குர்ஆன் 16:71)
செல்வமும் வறுமையும் அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளவை!

''நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்' என்று (நபியே!) நீர் கூறும்'' (அல்-குர்ஆன் 34:36)
அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வ செழிப்பைக் கொண்டு ஆணவம் கொள்ளாதீர்கள்! அல்லாஹ் காரூனுக்கு வழங்கிய செல்வத்திலிருந்தும், தண்டனையிலிருந்தும் படிப்பினை பெறுங்கள்!

''நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: ''நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்'' என்று கூறினார்கள். ''மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை'' (என்றும் கூறினார்கள்). (அதற்கு அவன்) கூறினான்: ''எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!'' இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.

அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: ''ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்’ என்று கூறினார்கள். கல்வி ஞானம் பெற்றவர்களோ; ''உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.

ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், ''ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்'' (அல்-குர்ஆன் 28:76-82)


செல்வ செழிப்புள்ளவர்களைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்!

''இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்'' (அல்-குர்ஆன் 9:85)
நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வத்தைக் கண்டு அதைப் போல் அடைய வேண்டும் என ஆசைக் கொள்ளாதீர்கள்!

நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்'' (அல்-குர்ஆன் 43:33)
உங்களின் பிள்ளைகளும், செல்வங்களும் இறைவனை மறக்கச் செய்ய வேண்டாம்!

''ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்'' (அல்-குர்ஆன் 63:9)
இவ்வுலகின் செல்வம், செல்வாக்கு மற்றும் அதிகாரங்கள் யாவும் அழிந்து விடக் கூடியவைகள்!

''ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: ''என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! ''அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- ''(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? ''என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! ''என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!'' (என்று அரற்றுவான்)'' (அல்-குர்ஆன் 69:25-29)
நிலையற்ற இவ்வுலக செல்வத்தின் மீது காதல் கொண்டுள்ள மனிதன்!

''குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக)'' (அல்-குர்ஆன் 104:1-9)
மறுமையில் பயனளிக்காத இவ்வுலக செல்வங்கள்!

''அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா'' (அல்-குர்ஆன் 26:88)

இம்மையின் செல்வ சுகங்களில் மூழ்கிக் கிடந்தவர்களின் செயல்கள் யாவும் அழிந்து விடும்!

''(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்'' (அல்-குர்ஆன் 9:69)
நரகத்தில் விழுந்து விட்டால் நம்முடைய இவ்வுலக செல்வங்கள் எவ்விதப் பயனும் அளிக்காது!

''(ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது'' (அல்-குர்ஆன் 92:11)
இறைவனுக்கு நெருக்கமாக்கி வைக்கும் ஆற்றல் செல்வத்திற்கு இல்லை! மாறாக ஒருவரின் நற்கருமங்களே இறை நெருக்கத்தைப் பெற்றுத்தரும்!

''இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்'' (அல்-குர்ஆன் 34:37)
கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவினால் அல்லாஹ் இரு மடங்கு கூலி தருவான்!

''(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்'' (அல்-குர்ஆன் 2:245)
தான தர்மங்கள் செய்வதினால் வறுமை உண்டாகாது! மாறாக செல்வம் பெருகும்!

''(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்¢ யாவற்றையும் நன்கறிபவன்'' (அல்-குர்ஆன் 2:268)
ஒவ்வொரு முறை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போதும் 1x7x100=700 மடங்கு நன்மைகள் கிடைக்கும்!

''அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்'' (அல்-குர்ஆன் 2:261)
செய்த தர்மங்களை சொல்லிக்காட்டாதிருந்தால் நற்கூலிகள் கிடைக்கும்!

''அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்'' (அல்-குர்ஆன் 2:262)
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்!

''அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்''
(அல்-குர்ஆன் 2:265)

அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களுக்கு தான தர்மங்கள் செய்யுங்கள்!

''பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்'' (அல்-குர்ஆன் 2:273)

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்!

''நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்'' (அல்-குர்ஆன் 3:92)
பணக்காரர்களுக்கிடையில் செல்வம் சுற்றிக்கொண்டிருக்கக் கூடாது!

''அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்'' (அல்-குர்ஆன் 59:7)

தான தர்மங்கள் செய்வதினால் உள்ளும் புறமும் தூய்மையடையும்!


''நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்'' (அல்-குர்ஆன் 9:103)


Abdul Rahman
Doha-Qatar
Please write your comments and your suggestion also send to mail:rahman1891@yahoo.com

Wednesday, April 14, 2010

பெற்றோர்களே! கணவன்மார்களே! குழந்தைகளே! உஷார்.

அஸ்ஸலாமு அலைக்கும்

சமீபத்தில் பத்திரிக்கை வாசித்த அனைவருக்கும் இந்த விஷயம் அறிந்ததே. tamilmuslimbrothers group லும் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதை அனைவரும் அறிவர். விஷயம் பாரதூரமாகி விட்டபடியால், இதன் நம்பகத்தன்மையைப்பற்றியெல்லாம் மேலும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல், நாம் அனைவரும் உடனடியாக நம்முடைய குடும்பத்தினர்களுக்கு இஸ்லாமிய வழிமுறையை பின்பற்ற கட்டளையிடுவதுடன், அவர்களின் நடவடிக்கையை கண்கானிக்கவும் வேண்டும். அப்போதுதான், இறைவனின் உதவியோடு, காவிகளின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும். மேலும், நாம் ஒவ்வொருவரும், இந்த விஷயம் முஸ்லிம்கள் அனைவரையும் சென்றடைந்து விட்டது (forward to everyone one who knows) என்பதை உறுதி செய்ய வேண்டும். பிரச்சனை நம் வீட்டின் கதவை தட்டுவதற்கு முன், இதன் வீரியத்தை உணர்ந்து, முற்றாக ஒழிப்பதற்கு நாம் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்கு உதவி செய்வானாகவும். ஆமீன்.














by

Abdul rahman

Monday, April 5, 2010

பாவச் செயல்கள் المعاصي وأنواعها

அல்லாஹ் தன்னை வணங்குவதற்காகவே படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துள்ளான். அவனது வல்லமையைப் புரிந்து கொண்டு தன்னைப் பயந்து வாழ வேண்டும் என்பதற்காகத் தனது அத்தாட்சிகளைத் தெளிவுபடுத்தினான். அவ்வாறே, தனது கட்டளைக்கு மாறு செய்வோருக்குத் தான் சித்தப்படுத்தி வைத்துள்ள தண்டனைகளையும் அவன் விபரித்துவிட்டான்.

ஆனால், இன்று மனிதர்களுடைய நிலையை எடுத்துப் பார்த்தால், அவர்கள் அல்லாஹ் தடுத்தவற்றை எடுத்து நடப்பவர்களாகவும் அவன் விலக்கியவற்றைத் தமக்கு அனுமதிக்கப்பட்டவை போன்று மாற்றிக் கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. மேலும், அவர்கள் அல்லாஹ்வுடைய ஏவல்களை உதாசீனஞ் செய்கின்றனர். இதன் காரணமாக மனிதனுக்கும் அல்லாஹ்வுக்குமுள்ள உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. ஜீவனோபாயத்திலும், ஆயுட் காலத்திலும் அபிவிருத்தி இல்லாமற்போய்விட்டது. இது பாவங்களுக்கான தண்டனைகளில் ஒன்றாகும்.

அதே நேரம் அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அபிவிருத்தியையும் பாவ மன்னிப்பையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், தனது ஏவல்களை அலட்சியப்படுத்தி விலக்கல்களைச் செயற்படுத்தும்போது அல்லாஹ் கோபப்படுகிறான் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

நிச்சயமாக அல்லாஹ் பாவிகளைக் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன் என்பதை மனிதன் அறிந்துகொள்ள வேண்டும். பாவிகளை விட்டும் அவனது தண்டனை தடுக்கப்பட முடியாததாகும். இன்று அதிகமானோர் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற அதேவேளை இறைவன் தம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் மறந்து வாழ்கின்றனர். அவர்கள் துணிச்சலுடன் பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கு இது மிகப் பிரதானமான காரணங்களிலொன்றாகும். இவ்வாறானவர்களுக்கு அல்லாஹ் தனது கடுமையான தண்டனையையும் கோபத்தையும் எச்சரிக்கை செய்கிறான்.

மேலும், பாவச் செயல்கள் அல்லாஹ்வுக்கும் மனிதனுக்குமிடையிற் தடுப்புச் சுவர்களாக மாறிவிடுவது மாத்திரமன்றி, முதலாவதாக அல்லாஹ்விடமும், அடுத்ததாக அவனது படைப்புக்கள் மத்தியிலும் அவனுக்கு இழிவைத் தேடிக் கொடுக்கின்றன. மனிதர்களோ பாவிகள், அநியாயக்காரர்கள் போன்றோரை இழி கண்கொண்டு நோக்குவர்.

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது, “பாவங்கள் மனித உள்ளங்களுக்குக் கேடு விளைவிக்கின்றன. நச்சுப் பொருட்கள் மனித உடலிற் பாதிப்புக்களை ஏற்படுத்துவது போலவே பாவங்கள் மனித உள்ளங்களைப் பாதிக்கின்றன. பாவங்கள் பல்வேறுபட்ட தராதரங்களிற் காணப்படுவது போல அவை யேற்படுத்துகின்ற தாக்கங்களும் பாதிப்புக்களும் வித்தியாசப்படுகின்றன. உலகிற் காணப்படுகின்ற நோய்கள் மற்றும் அழிவுகளுக்குக் காரணம் மனிதன் புரிகின்ற பாவச் செயல்கள் தவிர்ந்த வேறு காரணங்கள் ஏதுமுண்டா!”.

ஆகவே, பாவிகளனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீள வேண்டும். ஏனெனில், பாவ மன்னிப்பென்பது ஈருலக நற்பாக்கியங்களுக்குமான முதற்படியாகும். இதன் மூலம் மனிதனுக்கு ஆயுளிலும், ஜீவனோபாயத்திலும் அபிவிருத்தி கிடைக்கிறது; அழிவுகள் நீங்கிவிடுகின்றன. இவை பாவ மன்னிப்புக் கோருவதன் சில பயன்களாகும்.

பாவ மன்னிப்புக் கோருபவர் கீழ்வரும் விடயங்களைக் கவனத்திற் கொள்வது அவசியமாகின்றது:

¨ பாவத்தை விட்டும் விலகி நடத்தல்

¨ தான் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துதல்

¨ ஏற்கனவே செய்த பாவங்களை மீளவுஞ் செய்யாதிருக்க உறுதி கொள்ளல்

¨ பிறரது உடமைகளில் வரம்பு மீறி நடந்து கொண்டிருந்தால் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தல்

¨ பிறரது உரிமைகளை மீறியிருந்தால் அவற்றுக்காக உரியவரிடம் மன்னிப்புக் கோருதல்

¨ ஹராமான உழைப்பின் மூலம் வளர்த்த தனது உடலை நினைத்து மனம் வருந்துதல்

¨ ஏற்கனவே பாவச் செயல்களில் ஈடுபடப் பயிற்றுவிக்கப்பட்ட தனது உடலை நல்லறங்களில் ஈடுபடப் பயிற்றுவித்தல்

¨ அல்லாஹ் தனது பாவங்களை மன்னிக்க மாட்டானென்று நிராசை அடையாதிருத்தல்

ஒரு தாய் தனது குழந்தைகள் மீது காட்டுகின்ற அன்பைவிட மிக அதிக அளவில் அல்லாஹ் தனது அடியார்கள் மீது அன்பு காட்டுகிறான். இதன் காரணமாக இரவு காலங்களிற் பாவச் செயல்களில் ஈடுபட்டோர் பாவ மன்னிப்புக் கோரி மீளுவதற்காகப் பகலிலும், பகற் காலங்களிற் குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் பாவ மன்னிப்புக் கோரி மீளுவதற்காக இரவிலும் அல்லாஹ் தன் கரம் நீட்டுகிறான். ஆகவே, ஏற்கனவே இழைத்த குற்றச் செயல்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீளுவதுடன், மென்மேலும் பாவச் செயல்களில் ஈடுபடாது அல்லாஹ்வுக்குப் பொருத்தமான முறையில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வோமாக!



பாவங்களும் அவற்றின் வகைகளும்

பாவங்கள் என்பது அல்-குர்ஆனின் மூலம் அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலம் விதியாக்கப்பட்ட கடமைகளில் ஒன்றை விட்டுவிடுதல் அல்லது தடை செய்யப்பட்டவைகளில் ஒன்றைச் செய்தலாகும். அவை உள்ளத்தால் நிறைவேற்றப்படுகின்ற செயல்களாகவோ அல்லது உறுப்புக்களாற் செய்யப்படுகின்ற செயல்களாகவோ இருக்கலாம். அல்லாஹ் கூறுகிறான்,

وَمَن يَعْصِ اللّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ

“எவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகத்திற் புகுத்துவான்; அவன் அங்கு என்றென்றும் தங்கிவிடுவான்; மேலும், அவனுக்கு இழிவான வேதனையுண்டு” (அந்நிஸாஃ: 14).



பாவத்தின் வகைகள்

பாவங்கள் இரு வகைப்படுகின்றன. அவையாவன: 1) சிறு பாவங்கள், 2) பெரும் பாவங்கள். இவ்வாறு பாவங்களை இரு வகையாகப் பிரித்து நோக்குவதற்குக் கீழ்வரும் அல்-குர்ஆன் வசனங்களையும் நபி மொழியையும் ஆதாரமாகக் கொள்ளலாம். அல்லாஹ் கூறுகிறான்,

إِن تَجْتَنِبُواْ كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلاً كَرِيمًا

“நீங்கள் தடுக்கப்பட்டவற்றிற் பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொண்டால், உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம்” (அந்-நிஸாஃ: 31).

الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ

“நன்மை செய்வோர் யாரெனில், எவர்கள் சிறு பிழைகளைத் தவிரப் பெரும் பாவங்களையும் மானக் கேடானவற்றையும் தவிர்ந்து கொள்கிறார்களோ, அவர்கள்” (அந்-நஜ்ம்: 32). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெரும் பாவங்களில் ஈடுபடாது தவிர்ந்து கொள்ளும் காலமெல்லாம், ஐவேளைத் தொழுகைகள் ஒரு தொழுகை மறு தொழுகை வரையும், ஒரு ஜும்ஆத் தொழுகை மறு ஜும்ஆத் தொழுகை வரையும், ஒரு வருட ரமழான் மாத நோன்பு மறு வருட ரமழான் மாத நோன்பு வரையும் இடைப்பட்ட காலங்களில் நடைபெற்ற சிறு பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றன. [நூல்: முஸ்லிம்]



சிறு பாவங்கள்

கீழ்வரும் 4 நிலைகளிற் பாவச் செயல்கள் சிறு பாவங்களாகக் கருதப்படுகின்றன:

¨ இம்மையிலும் மறுமையிலும் பெரும் பாவங்களுக்கு வழங்கப்படுகின்ற மிகக் குறைந்த தண்டனையின் அளவை விட இவற்றுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் அதிகமாக இல்லாதிருத்தல்.

¨ குர்ஆன் வசனங்களிலோ நபி மொழிகளிலோ இவற்றுக்கான தண்டனை கூறப்படாதிருத்தல்.

¨ இவை அல்லாஹ்வின் சாபம், கோபம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று இடம்பெறாதிருத்தல்.

¨ இவற்றில் ஈடுபடுவது ஈமானைப் போக்கிவிடும் என்று இடம்பெறாதிருத்தல்.

இவ்வாறான சிறு பாவங்களுக்குக் கீழ்வரும் விடயங்களை உதாரணமாகக் கூற முடியும்.

¨ அந்நியப் பெண்களைப் பார்த்தல்

¨ பள்ளிவாசலிற் துப்புதல்

¨ பள்ளிவாசலிற் தர்க்கம் புரிதல்

¨ தொலைந்த பொருட்களைப் பள்ளியினுட் தேடுதல்

¨ தொழுகையில் திரும்பிப் பார்த்தல்

இவை தவிர இன்னும் ஏராளமான சிறு பாவங்களை அல்-குர்ஆனும் நபி மொழிகளும் அடையாளப்படுத்துகின்றன.



பெரும் பாவங்கள்

உலகத்தில் அல்லது மறுமையில் தண்டனைகள் நிர்ணயிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் பெரும் பாவங்கள் ஆகும். அதாவது, ஒரு செயலைக் குறித்து அதனைச் செய்தவன் மீது நரகம் கட்டாயமாகிவிடும்; அல்லது அவன் மீது அல்லாஹ்வின் கோபம் அல்லது சாபம் ஆகிய இரண்டிலொன்று ஏற்பட்டுவிடும்; அல்லது உலகத்திலோ, மறுமையிலோ அதற்காகக் குறிப்பிட்ட தண்டனையுண்டு என்று எச்சரிக்கப்பட்ட அனைத்து விடயங்களும் பெரும் பாவங்களாகவே கருதப்படுகின்றன.



பெரும் பாவங்களின் எண்ணிக்கை

பெரும் பாவங்களின் எண்ணிக்கையை வரையறுத்துக் கூறுவதில் ஸஹாபாக்கள் மத்தியிலும் முரண்பாடான கருத்துக்களே நிலவியுள்ளன. அவை வருமாறு:

¨ இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுவதாவது, “பெரும் பாவங்களின் எண்ணிக்கை நான்காகும்”.

¨ இப்னு உமர் (ரலி) கூறுவதாவது, “பெரும் பாவங்களின் எண்ணிக்கை ஏழாகும்”.

¨ இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாவது, “பெரும் பாவங்கள் ஏழு என்று கூறுவதை விட எழுபது என்று கூறுவதே மிகப் பொருத்தமானது”.

மேலும், 700 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் கீழ்க் காணும் விடயங்களை உதாரணமாகக் குறிப்பிட முடியும்.

அதே போன்று கீழ்வரும் விடயங்களும் பெரும் பாவங்களைச் சார்ந்தனவாகும்:

¨ ஒரே பாவத்தைத் தொடர்ந்து செய்தல்

¨ அல்லாஹ்வின் அருளை விட்டும் நம்பிக்கையிழத்தல்

¨ அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் அபயம் பெற்றிருத்தல்

¨ பொய்ச் சத்தியம் செய்தல்

¨ விபச்சாரம் செய்தல்

¨ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடல்

¨ திருடுதல்

¨ பொய்யுரைத்தல்

¨ சபித்தல்

¨ போதைப் பொருட்களைப் பாவித்தல்

¨ கர்வங் கொள்ளல்

¨ உறவுகளைத் துண்டித்து நடத்தல்

¨ புறம் பேசுதல்

¨ மோசடி செய்தல்

¨ ஆண்கள் கரண்டைக் காலுக்குக் கீழாக ஆடை அணிதல்

¨ இலஞ்சம் (வாங்குதல், வழங்குதல், துணை போதல்)

¨ ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாகுதல்

¨ அயல் வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்

¨ ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்கள் எதுவுமின்றி ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைகளை விட்டுவிடுதல்

இவ்வாறான குற்றச் செயல்களைத் தவிர்ந்து நடப்பதன் மூலம் அல்லாஹ்வின் அருளுக்கும் பாவ மன்னிப்புக்கும் உரியவர்களாக மாற எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!


Abdul Rahman
Doha -Qatar